Thursday 7 January 2016

சுற்றறிக்கை - தேதி: 01-01-2016




ஸ்ரீ சர்வமங்களா  நகர் குடியிருப்போர் சங்கம் (பதிவு.)
மனை எண்.42, வீட்டு எண். 7, மூன்றாவது பிரதான சாலை, ஸ்ரீ சர்வமங்களா நகர்,
சிட்லபாக்கம், சென்னை-600 0064. தொலைபேசி:  044- 22237080

சுற்றறிக்கை
தேதி: 01-01-2016

    அண்மையில் தொடர்ந்து பெய்த கன மழையின் வெள்ளத்தினால் பெரும்பாலான பகுதிகளில் மக்களுக்கு உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டது. அதில் பாதிக்கபட்ட மக்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக முதற்கண் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நமது நகரில் குடியிருக்கும் பெரும்பாலான மக்கள், நமது சங்கத்திடம் ரூ. 50 முதல் ரூ. 5000 வரையில் பணமாகவும், ரவை, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களாகவும்,  சுமார் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள இதர பொருட்களாகவும் தந்து உதவியுள்ளனர். நமது சங்க உறுப்பினர்களில் பலர் தன்னார்வத் தொண்டுள்ளத்துடன் குறிப்பாக தங்களது வீட்டில் இடம் அளித்து, மற்ற உறுப்பினர்களின் உதவியுடன், நகர் மக்கள் கொடுத்த பொருட்கள் ஒவ்வொன்றையும், ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உபயோகப்படுத்துபவைகளாகப் தனித்தனியாகப் பிரித்து, பைகளில் கட்டி, நகர் மக்கள் கொடுத்த பணத்தில் பிளாஸ்டிக் வாளிகள் (buckets), குவளைகள் (mugs), குடிதண்ணீர் பாட்டில்கள் போன்ற உபயோகமான பொருட்கள் வாங்கி அவைகளை மற்ற பொருட்களுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல இடங்களுக்கு நேரில் சென்று, பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவினார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
   
    மேலும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, நமது சங்கத்தின் சார்பாக ரூ 10,001/- க்கான காசோலையை, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில், காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியாளரிடம் கடந்த 14.12.2015 அன்று நேரில் வழங்கப்பட்டது. அப்போது, செம்பாக்கம் ஏரியைத் தூர்வாரி, கரைகளை உயர்த்தி, பலப்படுத்தி, ஏரியின் நீர்வரத்துப்பகுதிகளில் சாக்கடை நீர் விடுவதை தடுத்து, சரிசெய்து ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக்கோரும் ஒரு மனு மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுக்கப்பட்டது.

   சிட்லபாக்கம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் புனரமைப்பின் போது, மேல்தட்டு சாலையை குறிப்பிட்ட அளவு தோண்டி எடுத்து அப்புறப்படுத்தாமல், அதன்மீதே புதிய சாலைகள் போட்டு சாலையின் உயரத்தை அதிகப்படுத்துவதனால், மழைநீர் மற்றும் கழிவுநீர் வீடுகளினுள் புகுந்து மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். எனவே, சாலைகள் புனரமைப்பின் போது, ஏற்கனவே உள்ள உயரம் மிகாமல் போட வலியுறுத்தியும் நமது சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

   அண்மையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட துயர சம்பவம் போன்று இனிமேல் நடைபெறாவண்ணம் இருக்க நாமும் இயற்கையை மதித்து மண்வளத்தை பாதுகாக்க மழைநீர்க் கால்வாய்களிலும், பொது இடங்களிலும், காலிமனைகளிலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்தவிர்பதையும், குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் ஆபத்தினை உணர்ந்து, கூடுமானவரை அதன் உபயோகத்தினை தவிர்ப்பதையும் முதலில் நாமெல்லோரும் கடைபிடித்து மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கப் பழகுவோமாக.

   பலத்த மழையின் காரணமாக, இந்த ஆண்டு நமது சங்கத்தால் குழந்தைகள் தினவிழா கொண்டாட இயலவில்லை. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கையுடன், நமது சங்கத்தின் 17-ம் ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நடத்தப்படவுள்ள விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பும் நமது நகர்வாழ் மக்கள் மற்றும் அவர்களது குழந்தைகள், தங்களது பெயர்களையும், மற்ற விவரங்களையும், நமது நகர் பூங்காவின் எதிர்புறம் உள்ள திருமதி. சாந்தி சுவாமிநாதன் (செல். 9445783066) அவர்களிடம் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு  சங்கத்தின் செயற்குழு மற்றும் விளையாட்டுக்குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டோ, ssnrassociation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது  www.sarvamangalanagar.blogspot.com  என்ற வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மரம் வளர்ப்போம்; நமது பூமியைக் காப்போம்


M. ரவி
செயலாளர்
 Mob. 9841322473

No comments:

Post a Comment